சிறிலங்கா இனவெறியர்களின் ஆணவப்போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறிலங்கா அரசாங்கத்தால் இடிக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக நினைவுத்தூபி மீண்டும் நிறுவப்பட வேண்டும்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிறிலங்கா பயணம் மேற்கொண்டு ஓரிரு நாட்களில் இச்சம்பவம் நடந்திருப்பது, இந்தியாவை, சிறிலங்கா அரசு பொருட்படுத்தவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தச் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அன்றைக்கு யாழ். நூலகம் எரிக்கப்பட்டது என்றும் இன்றைக்கு யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள நினைவிடம் அழிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தைதலைக்கவசம் அணிந்து வந்த இராணுவக் கும்பல் பாதுகாப்பளிக்க இரவோடு இரவாக இடித்து தள்ளியிருப்பது கோழைத்தனத்துடன் கூடிய காட்டுமிராண்டித்தனம். இதனை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று கௌதமன் குறிப்பிட்டுள்ளார்.