நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 800இற்கும் அதிகமாகப் பதிவாகி வரும் நிலையில், இந்த எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தாண்டும் என்று, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள, இலங்கை சமுதாய மருத்துவ கல்லூரி தலைவர் மருத்துவர், நிகால் அபேசிங்க, கடந்த சில நாட்களாக சராசரியாக 900 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர் என்றும், இந்த எண்ணிக்கை விரைவில் ஆயிரம் வரை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, நேற்றிரவு சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 864 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இவர்களில் 27 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும், 10 பேர் சிறைச்சாலைக் கொத்தணியை சேர்ந்தவர்கள் என்றும், 827 பேர் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டவர்கள் என்றும், கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டில் இதுவரை இனங்காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 64 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது.