போர்க்குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சிறிலங்காவின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட 18 பேருக்கு கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு கனடிய அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘த அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட்’ என்ற அமைப்பு கனடிய வெளிவிவகார அமைச்சர் பிரன்சுவா பிலிப் சம்பேனுக்கு அனுப்பி வைத்தள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், மேஜர் ஜெனரல் சத்தியபிரியா லியானகே மேஜர் ஜெனரல் மஹிந்தா ஹதுருசிங்க, மேஜர் ஜெனரல் நந்தா மல்லவராய்ச்சி, மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய, கேர்ணல் ஜி.வி. ரவிப்ரியா, பிரிகேடியர் பிரசன்னா சில்வா, பிரிகேடியர் நந்தன உடவத்த, பிரிகேடியர் ஷாகி கலேஜ், அட்மிரல் வசந்த குமார ஜெயதேவா கரன்னகொட, அட்மிரல் திசாரா எஸ்.ஜி.சமரசிங்க, அட்மிரல் டி.டபிள்யூ.ஏ.எஸ்.திசானநாயக்க, சி.என்.வகீஷ்டா ஆகியோரின் பெயர்களும் காணப்படுகின்றது.
கனடாவில் 2017இல் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு ஊழல் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் சட்டங்களின் அடிப்படையிலும், மனிதத்திற்கு எதிரான குற்ற மற்றும் போர் குற்ற சட்டத்திற்கு அமைவான குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரமும் பயணங்களுக்கான மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அதிகாரத்தினை வழங்கியுள்ளது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.