ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா மீதான தீர்மானம் மீது வரும் திங்கட்கிழமை இரவு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஆறு அனுசரணை நாடுகள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 46 ஆவது கூட்டத்தொடரில், பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளன.
இந்த பிரேரணை மீது நாளை மறுநாள் விவாதம் நடத்தப்பட்டு, ஜெனிவா நேரப்படி இரவு 8.30 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாக்கெடுப்பின் போது, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பல்வேறு உறுப்பு நாடுகளிடமும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், சிறிலங்கா அரசாங்கமும், இந்த தீர்மானத்தை தோற்கடிக்க சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, போன்ற நாடுகளின் ஆதரவுடன் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.