சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிவான், லங்கா ஜெயரத்ன நேற்று உத்தரவிட்டார்.
2008-09 காலப்பகுதியில் கொழும்பு நகரப் பகுதியில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று கோட்டே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய சந்தேக நபராகத் தேடப்பட்டு வந்த நேவி சம்பத், விசாரணையில் இருந்து தப்பிக்க வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்கு, அட்மிரல் விஜேகுணரத்ன உதவினார் என்பதை நிரூபிக்க சாட்சியங்கள் உள்ளன என்று என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி நிசாந்த சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சந்தேக நபரான நேவி சம்பத் வங்கி மூலம் பெற்ற 5 இலட்சம் ரூபா பற்றிய வங்கி பரிமாற்ற தரவுகள் இன்னமும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, சந்தேக நபரான நேவி சம்பத் தப்பிச் செல்வதற்கு அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவினார் என்பதை நிரூபிக்க போதிய சான்றுகள் இருப்பின் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோட்டே நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை 5 மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 10ஆவது சந்தேகநபரான முன்னாள் லெப்டினட் கொமான்டர் ஹெட்டி ஆராய்ச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆராய்ச்சியிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, அவர் நினைவில்லை என்கிறார் எனவும், இது தற்போது சந்தேகநபர்களுக்குத் தொற்றியுள்ள வியாதி என்றும், குற்றப்புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பான விசாரணைகளைக் கையாளும் காவல்துறை பரிசோதகர் நிசாந்த சில்வா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பில் தாம் விசாரணை செய்தபோது, கேட்ட கேள்விகளுக்குச் சந்தேகநபர் நினைவில்லை என்றும், தனக்குத் தெரியாது எனவும், தான் இருக்கவில்லை என்ற பதில்களையே வழங்கியுள்ளார் எனவும், தற்போது சந்தேகநபர்களுக்குத் தொற்றியுள்ள நோயே அதுவாகும் என்றும் காவல்துறை பரிசோதகர் நிசாந்த சில்வா கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், சந்தேக நபர் ஞாபகம் இல்லை என்று கூறியுள்ளாரே தவிர அவர் மறுக்கவில்லை எனவும், அதனால் அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுங்கள் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் விசாரணைக்குச் சென்றபோது, அவரும் தனக்கு எதுவும் நினைவில்லை என்றே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.