யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்து சிறிலங்கா போக்குவரத்துச் சபையினர், பேருந்துகளை இயக்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதால், குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது,
புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இருந்தே இன்று காலையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான பேருந்துகள் புறப்பட வேண்டும் என்று, யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் அறிவித்திருந்தார்.
யாழ். நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தனியார்துறை பேருந்துகள் அங்கிருந்து சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
எனினும், சிறிலங்கா போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் இதனைப் புறக்கணித்து, வருவதால் யாழ். பேருந்து நிலையத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
தமக்கு உயரதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று கூறி பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்துச் சபை பணியாளர்கள், மறுத்து வருகின்றனர்.
போக்குவரத்து சபை அதிகாரிகளை இதுதொடர்பாக கலந்துரையாட அழைத்தும் அவர்கள் வரவில்லை என்றும், தொலைபேசி அழைப்புக்கும் பதிலளிப்பதில்லை என்றும், கூறியுள்ள யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், தமது உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.