சிறிலங்காவில் உள்ள முஸ்லிம்களை மாலைதீவுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என்று, அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை, சிறிலங்கா அதிபரின் கோரிக்கைக்கு அமைய, மாலைதீவில் அடக்கம் செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன், இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம்களை மாலைதீவுக்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்காதமை தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கயூம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.