சில ஊடகங்கள் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்த முயல்கிறது. ஆனால் அது என்னிடம் பலிக்காது என்றும் இவ்வாறானவர்களுக்கு பாடம் புகட்ட எனக்குத் தெரியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட வேண்டுமா?, இல்லையா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா – வலப்பனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் என்னை 60 மாதங்களுக்கு ஆட்சிப் பொறுப்புக்காக நியமித்துள்ளார்கள். இப்போது 14 மாதங்கள் கடந்துள்ளது.இந்த காலப்பகுதியில் கிராமங்களை அபிவிருத்தி செய்வதே எனது தேவை.
நான் மீண்டும் ஜனாதிபதியாக வரமாட்டேன் என பலர் கவலை அடைந்துள்ளனர். ஆனால் மக்கள் தான் அதனை தீர்மானிக்க வேண்டும்.
ஊடக சுதந்திரம் என்பது ஊடகத்தின் உரிமையாளருக்கு தேவையான விதத்தில் செய்திகளை வெளியிடுவது இல்லை, அவ்வாறு செய்தால் அது ஊடக மாபியாவாக கருதப்படும்.
இவர்கள் ஆட்சியாளர்களை கட்டுப்படுத்த முயல்கின்றார்கள்.என்னிடம் இது பலிக்காது. இவர்களுக்குப் பாடம் புகட்ட எனக்கு தெரியும்.
14 மாதங்களாக நான் எந்த ஊடகத்திற்கும் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கவில்லை. எனினும் ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்த முனைபவர்களுக்கு எதிராக நீதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க என்னால் முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.