தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாக இன்று காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய 3 காவல்துறை பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்திற்கு சென்ற காவல்துறையினர் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பிலும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியமை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை “தனது பெயர் குறிப்பிட்டு எவ்விதமான நீதிமன்ற உத்தரவுகள் வழங்கப்படவில்லை என்றும், தாம் நீதிமன்றத்தின் கட்டளைகளை மீறி நடக்கவில்லை” என்றும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை கோரி நிற்கையில் அரசியல் கட்சியின் பிரதிநிதியாக மக்களுடன் மக்களாக போராட்டத்தில் பங்கேற்றதாகவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் வைத்து இன்று ஒட்டிசுட்டான் காவல்துறையினரால் குறித்த வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பொலிஸா காவல்துறையினராலும் அதற்கு முன்பு கிளிநொச்சி காவல்துறையினராலும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்கு மூலத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது