சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்குப் பயன்படுத்த விரைவாக ஒப்புதல் அளிக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சினோபார்ம் தடுப்பூசிக்கான அனுமதியை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதி அறிவுறுத்தியிருப்பதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்திலேயே சிறிலங்கா ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனத்திடம் இருந்து மேலதிக தகவல்களை தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு அதிகாரசபை கோரியுள்ளது.
இந்த தகவல்கள் கிடைத்து, தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு அதிகாரசபை அனுமதி அளித்ததும், சினோபார்ம் தடுப்பு மருந்துக்கு அனுமதி கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.