பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக, பொத்துவில் மற்றும் திருக்கோவில் காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று பொத்துவில் நீதிவான் நீதிமன்றினால் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 03ஆம் நாள் தொடக்கம் பெப்ரவரி 07ஆம் நாள் வரை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் நடத்தப்பட்ட அமைதிப் பேரணியில் கலந்து கொண்டமை சார்பாக திருக்கோவில் மற்றும் பொத்துவில் காவல்துறையினரால் தொடுக்கப்பட்ட இரண்டு வழக்குகள் நேற்று பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன.
நேற்று நீதிமன்றில் முன்னிலையானபோது, திருக்கோவில் காவல்துறையினரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நீக்கப்பட்ட போதும், பொத்துவில் காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கில் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.