சீன எல்லையில் படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை என்று இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்துள்ள அவர், பிரதமர் மோடியும், சீன சனாதிபதி ஜின்பிங்கும் வூஹான் மாநாட்டில் ஒப்புக் கொண்டபடி, எல்லையில் அமைதியை நிலைநாட்டும் பணிகளில் இந்திய இராணுவம் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற முறையில் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், இந்த அமைதி நடவடிக்கைகள் பயன்தரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வு தனக்கு உண்டு எனவும், சீன எல்லையில் படை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய – சீன எல்லையில், எல்லையை நிர்ணயிக்காத பகுதிகள் அதிகம் உள்ளன எனவும், எனவே அங்கு எல்லை பிரச்னை உருவாகுவது அடிக்கடி நிகழ்கிறது என்றும், மேற்கு, வடக்கு என்ற பேதமின்றி எல்லையில் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் எனவும் இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.