சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் தமிழகத்துக்கு கிடைத்த பாக்கியம் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் திங்கள்கிழமை செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தபோது இதனைத் தெரிவித்துள்ள அவர், இந்த சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை உட்பட பல திட்டங்கள் குறித்து அறிந்துகொள்ளாது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
அதனால் நல்ல திட்டங்களை அறிந்துகொண்டு, மக்களுக்கான திட்டங்கள் என்பதை புரிந்துகொண்டு வழிவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் அக்கறையைவிட மத்திய அரசுக்கு அதிக அக்கறை இருக்கிறது என்றும், விவசாயிகள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாக மாட்டார்கள் என்கிற உறுதிப்பாட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ந்து கூறி வருகிறார் என்றும் தமிழிசை விபரித்து்ளளார்.
இந்தியாவிலேயே 10,000 கோடி மதிப்பீட்டில் 8 வழிச்சாலையை பெறும் இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றும், தமிழகத்திற்கு கிடைக்கும் நல்லனவற்றையெல்லாம் இந்த மாநிலத்துக்கு கிடைக்கும் தீங்கானவை போல எதிர்க்கட்சிகள் முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றன என்றும், இதைப்போல திட்டங்கள் நமக்கு மிகப்பெரிய பாக்கியம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
விவசாய நிலங்கள் குறைவான அளவில் கையகப்படுத்தப்பட்டு, அந்த விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பீடு கொடுக்கப்படுகிறது என்றும், இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு இன்னும் தீவிரமாக எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.