சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானத்தை வலுப்படுத்துமாறும், சிறிலங்காவின் மூத்த அதிகாரிகளுக்கு எதிரான தடைகளை விதிப்பது குறித்து ஆராயுமாறும், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திர சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈலிங் தெற்கு நாடாளுமன்ற உறுப்பினரான வீரேந்திர சர்மா, பிரித்தானியாவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபுவுக்கு இதுதொடர்பாக அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை முடக்குவது மற்றும், விசா தடைகளை விதிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பிரித்தானியாவின் உலகளாவிய தடைகளின் கீழ், சிறிலங்காவில் மூத்த அதிகாரிகளை சேர்த்துக் கொள்வது குறித்து அமைச்சர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமை மற்றும் பிரித்தானிய தமிழ் பெண்ணின் தொடர்ச்சியான உண்ணாவிரதம் குறித்து பெருமளவு செய்திகளை பெற்ற பின்னரே, தாம் இந்தக் கடிதத்தை பிரித்தானிய அமைச்சருக்கு அனுப்பியுள்ளதாக, ஈலிங் தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திர சர்மா தெரிவித்துள்ளார்.