எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது அமர்வில், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தாம் பெரும் சவாலாக அமைவோம் என்று உலகளாவிய தேசப்பற்றுள்ள இலங்கையர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் உலகளாவிய தேசப்பற்றுள்ள இலங்கையர் ஒன்றியம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 38 ஆவது அமர்வில் தாம் கலந்து கொண்டிருந்ததாகவும், அதன்போது இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எந்தளவிலான கெடுபிடிகளை மேற்கொண்டிருந்தன என்பதை அவதானிக்க முடிந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டபோதிலும், அது அனைத்துலக நாடுகளில் முன்னெடுப்பட்டு வருவதனை அவதானிக்க முடிவதுடன், அந்த நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் காண முடிகிறது எனவும், சிறிலங்கா படைப்பிரிவை எவ்வாறாவது தண்டிக்க வேண்டும் என்பதில் அந்தத் தரப்பினர் உறுதியாகவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள், சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராகவும் அப்போதைய அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன எனவும் அவர் சாடியுள்ளார்.
ஆகவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடரில் தாம் கலந்து கொள்ளவுள்ளதுடன், இலஙகைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்க்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருவதாகவும், அது தொடர்பில் அனைத்துலக தரப்பினரை விழிப்புணர்வூட்டும் மாநாடுகளையும் முன்னெடுத்து வருவதுடன், இங்கிலாந்திலுள்ள போர் விவகாரங்களுடன் தொடர்புபட்ட நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற்றுள்ளதாகவும், உலகளாவிய தேசப்பற்றுள்ள இலங்கையர் ஒன்றியத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.