சிறிலங்கா காவல்துறையினரின் தடைகளை தாண்டி, தமிழினத்துக்கு சர்வதேச நீதி கோரி, மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்புப் பேரணி இடம்பெற்றுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எழுச்சிப் போராட்ட அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை இந்தப் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தைத் தடுக்கும் வகையில், பெருமளவில் சிறிலங்கா காவல்துறையினர், காந்தி பூங்காவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அத்துடன், போராட்டத்துக்கு தடைவிதிக்கும் நீதிமன்றக் கட்டளையையும் அவர்கள் பெற்றிருந்த நிலையில், திடீரென அமைப்பாளர்களால் போராட்ட இடம் மாற்றப்பட்டது.
வந்தாறுமூலை பனிக்கையடி ஆலயத்தில் தொடங்கிய பேரணி சித்தாண்டிப் பிள்ளையார் ஆலயத்தில் நிறைவடைந்த்து.
மழைக்கும் மத்தியில் நடந்த இந்தப் பேரணியைத் தடுக்க நீதிமன்றக் கட்டளையை காவல்துறையினர் வழங்க முயன்ற போதும் அதனை கருத்தில் கொள்ளாமல் பேரணி இடம்பெற்றது.
இந்தப் பேரணியில், தவத்திரு வேலன் சுவாமிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதகுருமார் ,பொதுமக்கள் எனப் பெருமளவானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.