யாழ். மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்று மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணத்தினாலேயே உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவட்டத்தின் தற்போதய நிலை குறித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ். மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே 744குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் சுமார் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் தற்போது மொத்தமாக ஆயிரத்து 144 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.