சிறிலங்கா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடந்த 4ஆம் நாள் 12 மீனவர்களும், கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 மீனவர்களும் என்று குறித்த 16 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பில் நேற்றைய நாள் விசாரணை நடைபெற்றது.
16 மீனவர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள இரண்டு குற்றங்களுக்காக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன், ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்ட அந்த சிறைத் தண்டனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும், எனினும் தற்போது இந்த 16 மீனவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்படுகிறது எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.