தமிழர் பகுதிகள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா தொல்லியல் திணைக்களத்தாலும் காவல்துறை, இராணுவம் ஆகியவற்றாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குமுழமுனையில் அமைந்துள்ள தமிழர் வழிபாட்டுப் பிரதேசமான குருந்தூர் மலைக்கு நேரடியாக விஜயம் ஒன்றினை அவர் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் கூறுகையில், “இதுவொரு தமிழர் பிரதேசம். இங்கு எமது மக்களால் ஐயனார் ஆலயம் பராமரிக்கப்பட்டு அதனை வழிபட்டு வந்தனர் என்பதுதான் தமிழர் வரலாறு.
இனரீதியாக தமிழர்களிற்கெதிராக உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றிற்கமைவாக பொய்யினை கூறி, தொல்லியல் திணைக்களம் ஆராய்ச்சி என்ற போர்வையில் இங்கு வந்துள்ளது.
மேலும், திட்டமிட்டு தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் தமிழர் பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்டமாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.
இந்த செயற்பாட்டின் மூலம் முல்லை மண்ணில் பாரிய ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது. இந்த ஆக்கிரமிப்பில் இருந்து நாம் எப்படி பாதுகாப்பாக இருக்கபோகிறோம் என்பது கேள்விக்குறியான ஒன்றாகவே இருக்கிறது என்றார்