தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக உறுதியளித்த மைத்திரி – ரணில் அரசாங்கமும், அவர்களை விடுவிக்காது இழுத்தடிப்புச் செய்து வருவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
சிறைச்சாலைகளில் வாடும் 96 தமிழ் அரசியல் கைதிகளையும் எந்தவித தாமதமும் இன்றி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அந்த அமைப்பின் எற்பாட்டில் முன்னெடுத்து வரும் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் நேற்றைய நாள் நீர்கொழும்பில் நடாத்தப்பட்டது.
நீர்கொழும்பு பேருந்து தரிப்பிடத்தில் நேற்று மாலை 4 மணிக்கு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அங்கிருந்தவர்களிடம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கடந்த செப்ரெம்பர் மாதம் 7ஆம் நாள் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த கையெழுத்து போராட்டம், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது