சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் காலை 10 மணிமுதல்11 மணிவரை இந்தப்போராட்டம் நடைபெற்றது
இதன் போது அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே விலக்கு , உணவுப் புறக்கணிப்பும் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிரைப் பறிக்காதே, நல்லாட்சி அரசே ஏமாற்றாதே, வாய்ப்பு பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அதரசியல் கைதிகளையா, நல்லாட்சி அரசே வாக்குறுதி என்னாச்சு, நல்லாட்சி அரசே உயிர்களை கொல்லாதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் முழக்கங்களை எழுப்பியிருந்தனர்
இந்தப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்கின்ற நிலையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் இன்று சிறப்பு ஆலய வழிபாடும், கவனவீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் கடந்த 576 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இதனை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா கந்தசாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், பஜார் வீதி வழியாக ஹொறவப்பொத்தானை வீதி சென்று அங்கிருந்து நீதிமன்றம் வழியாக போராட்ட இடத்துக்கு மீண்டும் சென்றனர்.