தமிழ் மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒற்றுமை முயற்சிகளுக்கு தமிழரசுக் கட்சி ஒத்துழைத்துச் செயற்படும் என தீர்மானித்துள்ளது.
எனினும், அந்த ஒற்றுமை முயற்சிகள் தேர்தல் கூட்டாகவோ அல்லது அந்தக் கூட்டிற்கு பெயர் சூட்டவோ கூடாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, சி.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீதரன், சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், அரியநேத்திரன், சிவமோகன், சிறிநேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், ஒற்றுமையான முன்னெடுப்பு என்பது அரசியல் கூட்டோ அல்லது தேர்தல் கூட்டோ அல்ல. தமிழர்களுக்கு எதிரான விடயங்களில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றுசேர வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ் மக்கள் மத்தியிலே இது தொடர்பான எதிர்பார்ப்புகளும் இருக்கிறது.
எனவே, அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதை அரசியலுக்காகச் செய்கிறோம் என்று சொன்னால் அதனை ஏற்கமுடியாது.
அத்துடன், இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்து இன்று பேசினோம். மனித உரிமைப் பேரவை தனக்கு உரிய அதிகார வரம்புகளைப் பயன்படுத்தி தமது வார்த்தைப் பிரயோகங்களின் ஊடாக சில முக்கியமான விடயங்களை புதிய வரைபுக்குள்ளே உள்ளடக்கியிருக்கிறார்கள் என்றார்