தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படாவிடின் கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் ஏற்படுவது நிச்சயம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில், தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பின் தலைமை உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு ஏற்ற ஒரு தீர்வுத்திட்டம் வருமேயானால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பிற்குள் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்ற போதிலும், சரியான தீர்வு கிடைக்குமாயின் அதனை எவரும் எதிர்ப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் அவர் விபரித்துள்ளார்.
அதாவது சமஷ்டி அரசியலமைப்பு முறைமை மற்றும் வடக்கு- கிழக்கு இணைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்த அடிப்படையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாமல் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வுகள் அவர்கள் மீது திணிக்கப்படுமாயின், கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் வெடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றும் என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.