தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புக்களும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதியான வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் பலம் காரணமாக தம்மோடு அணி சேர்ந்து கொள்வதற்கு பலர் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனை தலைமையாகக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப், சித்தார்த்தனை தலைமையாகக் கொண்ட புளொட் கட்சியும் தமிழ் மக்கள் பேரவையோடு இணைந்திருப்பதுடன், கஜேந்திரகுமாரை தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் எம்மோடு இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு இந்த நான்கு சாராராகிய தாம் ஒரே அணியில் இணைந்து செயற்பட்டு வருவதன் ஒரே நோக்கம், வடக்கும் கிழக்கும் இணைந்ததான சமஷ்டி ரீதியிலான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்த தீர்வினூடாக தமிழ் பேசும் சமூகங்கள் இலங்கையிலே நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் விபரித்துள்ளார்.
‘எழுக தமிழ்’ நிகழ்வு மக்களின் பேராதரவோடு வடக்கிலே இடம்பெற்று விட்ட நிலையில், அதேபோல கிழக்கிலே எதிர்வரும் 21ஆம் நாள் எழுக தமிழை மக்கள் பேராதரவுடன் நடத்தி பிரகடனத்தைச் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கிலே தேசிய இனங்களாக வாழ்கின்ற தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து நிற்பதைவிட இணைந்து வாழ்வதுதான் காலப் பொருத்தமாகவும் சாலப் பொருத்தமாகவும் உள்ளதென்பது அனுபவ வாயிலான, வெளிப்படையான உண்மை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.