அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் போன்றோர் பெற்றுக்கொள்ள முடியாததை, இன்று நிபந்தனைகளை முன்வைத்து புதிய அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தம் என்ற போர்வையில் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ள அவர், நாட்டில் அன்றிருந்த பயங்கரவாதத்தை இல்லாமல் செய்த பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினரின் சக்தியை தற்போதைய அரசாங்கம் சீர்குலைக்குமாயின், எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் விடுதலைப்புலிகள் தலைதூக்கினால் அப்போது இருக்கும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்பு படையினர், அன்று எடுத்ததைப் போன்ற தீர்மானத்தை எடுப்பதற்கு முன் 100 தடவைகள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அன்று பயங்கரவாதத்தினால் பெற்றுக்கொள்ள முடியாததை இன்று மக்கள் விடுதலை முன்னணியின் உதவியுடன் கொண்டுவரப்படும் புதிய அரசியல் அமைப்பு மற்றும் 20ஆவது சீர்திருத்தம் மூலம் மீண்டும் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர் சாடியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் கைதிகள் என்ற போர்வையில் வெளியில் வரும் நிலையில், போராடி மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொணடுத்த இராணுவத்தினரை விசாரணைக்காக அழைத்து சிறையில் தள்ளும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்த பாதுகாப்பு படை மற்றும் பாதுகாப்பு துறையின் சக்தியை தற்போதய அரசாங்கம் சீர்குலைத்து வருகின்றது எனவும், இவ்வாறு நடப்பதால் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் அதாவது 2025ஆம் ஆண்டிற்கு பிறகு விடுதலைப்புலிகள் மீண்டும் தலை தூக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் தாம் எடுத்ததைப் போன்ற தீர்மானத்தை எடுப்பதற்கு அப்போது இருக்கும் பாதுகாப்பு பிரிவு 100 தடவைகள் யோசிக்க வேண்டி வரும் எனவும், இதற்கு காரணம் தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பு பிரிவினரை நடத்தும் முறையே என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.