தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் இன்று தனது 64வது அகவையை எட்டியுள்ள நிலையில், அவரை உலகத் தமிழினம் இன்று கொண்டாடி மகிழ்கிறது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களும் யாழ் பல்கலைக்கழக வாளகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இதே வேளை தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தலைவரின் சிந்தனை எனக் குறிப்பிட்டு அவரின் பல சிந்தனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதேவேளை தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாட முயற்சித்தமைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த பொருட்கள் பறிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிவாஜிலிங்கம் தலைமையில் இன்றையநாள் காலை வல்வெட்டித்துறையில் உள்ள தலைவரின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு கொண்டாட இருந்த நிலையில், அங்கு சென்ற காவல்துறையினர் அங்கு துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்ததுடன் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
இந்த நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைவரின் வீட்டுக்கு சென்றபோது சிவாஜிலிங்கமும் வல்வெட்டித்துறையில் உள்ள காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் காவல் நிலையம் அழைத்து கேக் உள்ளிட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரை விடுவித்துள்ளனர்.
தேசியத் தலைவர் பிரபாகரனின் அகவை நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள மாவீரர் பெற்றோர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் குடும்பங்களுக்கு மிதிவண்டிகள் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸில் இயங்கும் அனைத்துலக மனித உரிமை சங்கம் ஊடாக பிரான்ஸ் பாரிசில் வசிக்கும் ஈழ உறவுகள் இந்த மிதிவண்டிகள், பாடசாலை கல்வி கற்கும் உபகரணங்களையும், வறுமை கோட்டில் உள்ள குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.
இதேவேளை தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 26 இல் கிளிநொச்சி டீப்போ சந்தியில் பழைய நினைவழியாத்தடயம் பாண்டியன் சுவையூற்று காணப்பட்ட நினைவிடத்தில் இன்றையநாள் பசுமை பூங்கா அமைக்கப்பட்டு சம்பிரதாய பூர்வமாக மக்களிடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, டிப்போ சந்திப் பகுதியில் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பசுமைப் பூங்கா புனித நாட்களை அடையாளப்படுத்தும் வகையில் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் முற்பகுதியில் லெப்டினன்ட் கேணல் சந்திரன் அவர்களின் ஞாபகர்த்த சந்திரன் பூங்கா அமைந்திருந்தது அந்த இடம் இன்று சிறிலங்கா இராணுவ பிரசன்னத்துடன் இராணுவ நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு தமிழ் மக்களின் அவலத்தை வெற்றிக் களிப்பாக மாற்றி சிங்கள தேசம் மகிழும் நிலையில் காணப்படுகின்றது.
அதனை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இத்தகைய துன்பவியல் நிலையில் இருந்து மக்களை மீட்டு மகிழ்ச்சிகரமான ஒரு சூழலை உருவாக்கும் பொருட்டு பசுமை பூங்கா ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தலைவரின் 64ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளதுடன். தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 64 பேர் இரத்ததானம் செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் தலைவரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட அதேவேளை, மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.
மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த இரத்த தான முகாம் நடைபெற்றதுடன், தலைவரின் 64ஆவது பிறந்தநாள் விழா திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழர் விடியல் கட்சியின் ஏற்பாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளன.