தியாக தீபம் திலீபன் அவர்களின் 31 ஆவது ஆண்டு நினைவு நாள் சிறப்பாக கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் அதற்குரிய ஏற்பாடுகள் முழுமையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள குறித்து முன்னாள் போராளிகள் , துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த மாறன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந்த இரண்டு மாவீரர்களின் தந்தையும் மூத்த போராளியுமான ஒருவர் ஏற்றுவார் எனவும், தொடர்ந்து அங்கு சமுகமளித்துள்ள ஏனைய மாவீரர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடர்களை ஏற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து தியாகி திலீபனையும் தமிழரின் விடுதலை போராட்ட வரலாற்றில் ஆகுதியாகிய மாவீரர்களையும் பொதுமக்களையும் நினைவு கூரும் வகையில் அகவணக்கம் நடைபெறும் என்றும், அதைத் தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்த இடத்தின் புனிதத்தைப பேணும் வகையில் எவரது உரையும் அங்கு இடம்பொறாது எனவும், திலீபனின் நினைவை பகிரவிரும்பும் அல்லது தமது உணர்வினை உலகுக்கு உரைக்க ஆர்வமுள்ளவர்களுக்காக நல்லூர் மேற்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், அவ்வாறான எண்ணம் உடையோர் இதில் இணைந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மாவீர்ர் நாளுக்கு முன்னதாக எமது எதிர்பார்ப்புகளுக்கு இலங்கை தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா மதிப்பளித்திருந்தார் எனவும், வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து துயிலுமில்லங்களிலும் முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக ஒழுங்காக நடைபெற்றிருந்தன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே இந்த ஆண்டு திலீபன் நினைவு நாள் தொடர்பாக விடுத்த வேண்டுகோளுக்கும் அவர் மதிப்பளித்துள்ளதாகவும், இந்த முன்மாதிரியை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று நம்புவதாகவும், அத்துடன் எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், ஐனநாயகப் போராளிகள் கட்சியினர், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் அனைவருக்கும் தமது நன்றிகள் எனவும் நினைவுநாள் நிகழ்வுகள் தொடர்பிலான அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.