தாயக உறவுகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கனடிய மண்ணில் கனடா தமிழ் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிழமை, மாலை 3 மணி முதல் 7 மணி வரை, ரொரன்ரோ எக்ளிங்டன் அவனியூவில் அமைந்திருக்கும் இலங்கை துணை தூதரகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வவுனியாவில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும், அவர்கள் போராட்டத்தை ஏறெடுத்து பாராதிருக்கும் இலங்கை அரசின் செயலை வன்மையாக கண்டித்தும், நீண்ட காலம் விசாரணையின்றி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடாத்தப்படவுள்ளது.
அத்துடன் லண்டனில் அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்களை ‘கழுத்தை வெட்டுவேன்’ என்று சைகை காட்டி எச்சரித்து, லண்டன் தமிழ் மக்கள் மீது இனவெறியை வெளிப்படுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயலை கண்டித்தும், தாயகத்தில் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழர் நிலங்களை மீட்க மண் மீட்பு போராட்டத்தில் போராடி கொண்டிருக்கும் மக்களை ஏறெடுத்து பாராத அரசின் உதாசீனத்தைக் கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்டவுள்ளது.
இந்த நூற்றாண்டின் கொடிய இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலைக்கு நீதி வேண்டியும் கனடா வாழ் தமிழ் மக்கள் நடத்தும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, எம் மக்களிற்காக புலத்தில் தமிழ் மக்கள் நாங்கள் இருக்கின்றோம் என்ற வலிமையான நம்பிக்கையூட்டும் செய்தியை காத்திரமாக பதிவு செய்வோம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்னமும் தொடரும் இனப்படுகொலையின் கூறுகளில் எங்கள் தமிழினம் தொடர்ந்தும் அடக்குமுறைகளில் சிதையும் உண்மைகளை உலக சமூகத்திற்கு ஓங்கி எடுத்துரைக்கவும், மாபெரும் மக்கள் சக்தியின் அணி திரள், போராட்டங்களால் இந்த உலகம் திரும்பி பார்த்து உண்மையை உணர வலிமையாக குரல் கொடுக்க, ஒன்றுபட்ட தமிழினமாக அனைவரும் அணி திரள்வோம் எனவும் அறைகூவல் விடுகு்கப்பட்டுள்ளது.
அழுதோம், தொழுதோம். இந்த உலகம் எம்மை ஏறெடுத்தும் பார்க்கவில்லை – தொடர்ந்தும் எழுவோம்! எனவும், எங்கள் தமிழினம் இனியும் தூங்காது! வாருங்கள் எழுச்சி கொண்ட தமிழினமாக வரலாறு படைத்திடலாம்! என்றும் கனடா தமிழ் சமூகமும் மாணவர் சமூகமும் அனைத்து கனேடிய தமிழ் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.