ஐ.நா மனித உரிமைகள் சபையின் சிறுபான்மையினரின் பிரச்சனைகள் தொடர்பான( UN Forum on Minority issue) மாநாட்டின் 11 வது கூட்டத்தொடர் 29.09.18 & 30.09.18 ம் திகதிகளில் இடம்பெற்றிருந்தது. இவ் வருட இம் மாநாடு “நாடற்றவர்கள்” (Statelessness) எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டே அமைந்திருந்தது.
ஐ.நா சபையின் அகதிகளிற்கான ஆணையாளரின் (UNHCR) 2017ம் ஆண்டறிக்கையின் பிரகாரம், உலகின் நாடற்றவர்களில் 75% ஆனோர் சிறுபான்மையினரே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இம் மாநாட்டில் பின்வரும் தலைப்புகளின் கீழ் பல்வேறு கலந்துரையாடல்களும், பொது விவாதங்களும் இடம்பெற்றிருந்தது.
# சிறுபான்மையினரைப் பாதிக்கும் நாடற்றவர்கள் எனும் பிரச்சனைக்கான மூல காரணங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும்
# மோதல்கள், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படல், இடப்பெயர்வுகளால் சிறுபான்மையினர் நாடற்றவர்களாக்கப்படல் – இதற்கான சாத்தியமான தீர்வுகள், எதிர்நோக்கும் சவால்கள்
# சிறுபான்மையினரிற்கான பிறப்புரிமை, இயல்புரிமை, வதிவிடவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதனூடாக அவர்களது பிரசாவுரிமையைப் பெற்றுக்கொடுத்தல்
# இந் நாடற்ற தன்மையால் பெண்கள், சிறுவர்கள் எவ்வாறு பாதிப்பிற்குள்ளாகின்றனர், சர்வதேச சட்டங்களிற்கமைய பாலியல் சமத்துவத்தை மேம்படுத்தல்
இம் மாநாட்டில் தமிழர் இயக்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, தமிழர் தாயகத்தில் பூர்வீகமாக பெரும்பான்மையினராக வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்கள், சிறீலங்கா அரசால் எவ்வாறு திட்டமிட்டு சிறுபான்மையினராக்கப்படுகின்றனர், அத்துடன் இனவழிப்பிற்கும் உள்ளாக்கப்படுகின்றனர் என ஆதாரங்களுடன் அழுத்தமாக எடுத்துரைத்திருந்தனர்.
இவ்வாறான சர்வதேச மாநாடுகளில் தமிழர் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, சகல சர்வதேச அரங்குகளிலும் ஈழத் தமிழர் பிரச்சனையை தொடர்ச்சியாக ஒலிக்கச் செய்து, சர்வதேச சமூகத்தின் ஆதரவை எமக்குச் சாதகமாகத் திருப்புதல் இக்கால கட்டத்தின் இன்றியமையாத தேவையாகும்.