வரலாற்று புகழ்பெற்ற மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் இருந்து வருகைதந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீச்சர ஆலயத்தினுள் உள்ள மகா சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்து நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீச்சர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறு இந்து கலாசார நிகழ்வுகள், அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இன்று சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.