துருக்கி தலைநகரான இஸ்தான்புல் நகரையொட்டி, ஐரோப்பிய கண்டத்தையும், ஆசிய கண்டத்தையும் பிரிக்கும் பாஸ்பரஸ் ஜலசந்தி பகுதியில் ஆர்ட்டாக்கோய் மாவட்டத்தில் உள்ள ஒரு இரவு விடுதி, உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் அடிக்கடி ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் பிரசித்தி பெற்ற இடமாகும்.
இன்று பிறந்த புத்தாண்டை வரவேற்க இந்த இரவு விடுதியில் நேற்றிரவு சுமார் 500 பேர் திரண்டு, மகிழ்ச்சியுடன் காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் உச்சகட்ட உற்சாகத்தில் அவர்கள் திளைத்திருந்தபோது, இரவு சுமார் 1.30 மணியளவில் தானியங்கி ரக துப்பாக்கியுடன் உள்ளே புகுந்த ஒருவன், எதிர்பட்டவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான்.
இதில் 35 பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர், 40-க்கும் அதிகமானவர்கள் குண்டு காயங்களுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பலியானவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் என தெரியந்துள்ளது. அவர்களில் ஒருவர் குஜராத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி.யின் மகன் அபிஸ் ரிஸ்வி என்றும், மற்றொருவர் குஷி ஷா என்றும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.