யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்ட விவகாரத்தில் தமக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் உதய கம்மன்பில பதிலளித்த போது,
நினைவுத் தூபி உடைக்கப்பட்ட விவகாரத்திலோ அல்லது, உடைக்கப்பட்ட இடத்தில் புதிய நினைவுத் தூபியை அமைக்கும் விடயத்திலோ, சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்த தொடர்பு இல்லை.
இந்த விடயத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியான எந்த முடிவையும் எடுக்கவில்லை.
நினைவுத் தூபியை இடிக்கும் முடிவையும், பின்னர் அதனை மீள நிர்மாணிக்கும் முடிவையும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக அதிகாரிகளே எடுத்தனர்.” என்றும் அவர் கூறியுள்ளார்.