தென்னாப்பிரிக்காவில் இழப்பீடு ஏதும் வழங்காது நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிப் பதிவு செய்து வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில்,
நிலச்சீர்திருத்தம் செய்வதற்கு ஏதுவாக அரசமைப்புச் சட்டத் திருத்த முன்மொழிவை ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.
இந்தச் சீர்திருத்தம் பொருளாதாரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலச்சீர்திருத்த நடவடிக்கை மந்தமாக இருப்பதாகக் கூறி கடந்த சில மாதங்களாக மக்களிடையே கோபம் அதிகரித்து வரும் நிலையில் குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலச்சீர்திருத்தமானது பெரும் நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி நிலமற்றவர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையைக் கொண்டது.
தென்னாபிரிக்காவில் உள்ள சிறுபான்மை வெள்ளையின மக்களிடம் ஏராளமான நிலம் குவிந்துள்ளதாகவும், சில ஆயிரம் வெள்ளையின வணிக ரீதியான விவசாயிகளிடம் வளமான நிலங்களின் பெரும்பகுதி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.