கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக, இந்தியா, சிறிலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் முத்தரப்பு செயலகம் சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சிறிலங்கா பாதுகாப்பு செயலர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் பங்கேற்ற, கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான முத்தரப்பு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டக் கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றிருந்தது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் முத்தரப்பு செயலகம் கொழும்பில் உள்ள சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்ன, மற்றும் இந்தியா, மாலைதீவு தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.
இந்தச் செயலகம், தினமும் 24 மணி நேரமும் செயற்படும் என்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்ன தெரிவித்துள்ளார்.