லிபரல் கட்சி உறுப்பினர்கள் இருவர் தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு குறித்த விசாரணையில், விசாரணைக் குழு முன்பாக இன்று ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின்னும் சாட்சியமளிக்கவுள்ளார்.
முதல்வர் கத்தலின் வின்னின் முன்னாள் துணை அதிகாரி மற்றும் லிபரல் தேர்தல் பரப்புரை செயற்பாடுகளின் இயக்குனர் பாட் சோர்பரா மற்றும் உள்ளூர் லிபரல் அமைப்பாளரான ஜெரி லொக்கீட் ஆகியோர் மீது தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் குற்றச் சாட்டுகள் குறித்த விசாரணை கடந்த வியாழக்கிழமை சாட்பர்ரியில் ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே, இன்று அதில் முன்னிலையாக முதல்வர் கத்தலின் வின்னும் தனது சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளார்.
இந்த வழக்கில் முதல்வர் கத்தலின் வின் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை என்ற போதிலும், தேர்தல் காலப்பகுதியில் எவ்வாறான அறிவுறுத்தல்களை இவர் குறித்த அந்த இருவருக்கும் வழங்கினார் என்ற விபரங்களை விசாரணையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த சாட்சியப் பதிவு இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இடைத்தேர்தலின் போது குறித்த அந்த இருவரும் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், பாட் சோர்பரா மீது இரண்டு குற்றச்சாட்டுகளும், ஜெரி லொக்கேட் மீது ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்கள் இருவருமே தம்மீதான அனைத்து குறற்ச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளனர்.
குறித்த இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 25,000 டொலர்கள் வரையிலான அபராதம், மற்றும் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை என்பன விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.