சிறிலங்காவுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து வழங்கத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பின், சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.
இருவரும் நடத்திய தொலைபேசிய உரையாடலின் போதே இந்த உறுதி மொழி அளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுடன், பட்டி மற்றும் பாதை ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு விரும்புவதாகவும், தொற்றுக்குப் பின்னரான காலகட்டத்தில் சிறிலங்காவின் பொருளாதார மீட்சிக்கு பங்களிக்கும் வகையில், இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வான் போக்குவரத்து, கல்வி மற்றும் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்புள்ள ஏனைய துறைகளில், சிறிலங்காவுக்குத் தேவையான உதவிகளை தொடர்ந்து சீனா வழங்கும் என்றும் அவர், உறுதி அளித்துள்ளார்.
ஐ.நாவில் சீனா சட்டரீதியான ஆசனத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா வழங்கிய ஆதரவை சீனா ஒருபோதும் மறக்காது என்றும், ஏனைய பரஸ்பரம் கரிசனைக்குரிய விவகாரங்கள், சட்ட ரீதியான உரிமைகளை பாதுகாத்தல், பூகோள நீதி மற்றும் நியாயத்தை ஊக்குவித்தல் போன்ற விடயங்களில் சிறிலங்காவுடன் இணைந்து சீனா பணியாற்றும் என்றும் சீன ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.