தொண்டைமானாறு, கெருடாவிலைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவி ஒருவர் உள்ளிட்ட மூவருக்கு வடக்கில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா போக்குவரத்து சபையின் காரை நகர் சாலையில் பணியாற்றும் தந்தைக்கு ஏற்பட்ட தொற்றை அடுத்து, குறித்த மாணவிக்கும் நேற்று தொற்று இனங்காணப்பட்டுள்ளது.
மேலும், மன்னாரில் இருந்து யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, திருகோணமலை நகரில் என்.சி.வீதி, மத்திய வீதி, மூன்றாம் குறுக்குத்தெரு போன்ற பகுதிகளில், நேற்று முன்தினம் 243 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகள், இன்று வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில், 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 30 பேர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்றும், 11 பேர் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்றும் நகர பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.