நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியரான நக்கீரன் கோபால் இன்று செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையத்தில் வைத்து தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் குறித்து நக்கீரன் இதழில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நக்கீரன் இதழில் வெளியான அட்டைப்படக் கட்டுரை ஒன்றில் கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு செல்லத் தூண்டியதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவி, ஆளுநரைச் சந்தித்ததாகக் கூறப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட கோபால் சிந்தாதிரிப் பேட்டை காவல் நிலையத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரைச் சந்திப்பதற்கு சென்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைக்கோவிற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனை அடுத்து வைக்கோ போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டமைக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைனவர் ஸ்டாலின், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைக்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் என பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.