ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினியின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
யாழ் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்த நுலை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, முதல் பிரதியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டுள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் ஏகலைவன் தொகுத்துள்ள இந்த நூலில், ராஜீவ் கொலையின் பின்னணி , வழக்கு விசாரணை , வேலூர் சிறையில் நடைபெற்ற நளினி-பிரியங்கா காந்தி சந்திப்பு உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நேற்றைய இந்த நூல் வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி, முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், நளினியின் தாயார் பத்மாவதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.