தான் ஆட்சியில் இருந்திருந்தால் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணிக்கு இடமளித்திருக்கமாட்டேன் என்று முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகவியலாளர்களை இன்று கொழும்பிலுள்ள அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி நாட்டில் இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மைக்காலமாக நடந்து கொள்கிறார் என்றும் மகிந்த ராஜபக்ச காட்டம் வெளியிட்டுள்ளார்.
வடக்கில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது எனவும், அரசியல் வங்குரோத்து நிலைக்கு வட மாகாண முதலமைச்சர் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காகவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறான நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வட மாகாண முதலமைச்சர் மற்றும் ஏனையவர்கள் எழுக தமிழ் என்ற பெயரில் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடாத்திய போதிலும், அதில் கலந்துகொண்ட மக்கள் தமது அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு கோரியே கலந்து கொண்டனர் என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.