யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி, இரவோடிரவாக தகர்க்கப்பட்டமை அநாகரிகமான செயல் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், ரிஷாட் பதியுதீன் கண்டித்துள்ளார்.
“பல்கலைக்கழக வளாகத்தில் இத்தனை வருடங்களாக இருந்து வந்த நினைவுத் தூபி, இனவாதிகளையும் கடும்போக்காளர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவே, அவசர அவசரமாகத் தகர்த்து, அழிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையான இனவாத செயற்பாடுகளை மானுட நேயமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம் என வாய்ச்சொல்லில் மட்டும் கூறிக்கொண்டு, சிறுபான்மை மக்களான தமிழர்களையும் முஸ்லிம்களையும் தொடர்ந்தும் வஞ்சம் தீர்ப்பதிலேயே சிறிலங்கா அரசாங்கம், தமது காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கின்றது.
சிறுபான்மை மக்களின் உடைமைகளை நொருக்குவதன் மூலமும், உள்ளங்களை உடைப்பதன் மூலமும் இனவாதிகளை உற்சாகப்படுத்தி, நாட்டை மேம்படுத்தலாம் என இவர்கள் எண்ணுகிறார்கள் போலும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.