மே 17 இயகத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இன்று நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்படட நிலையில் மீண்டும் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரெலைட் விவகாரம் தொடர்பில் பேசிவிட்டு ஜெனீவாவிலிருந்து புறப்பட்ட திருமுருகன் காந்தி, டுபாய் வழியாக நேற்று பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது, அவரை விமான நிலைய காவலர்கள் கைது செய்தனர்.
நேற்று இரவு 10.30 மணியளவில் அவர் சென்னையிலிருந்து சென்ற தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று வெள்ளிக்கிழமை காலையில் சென்னை கொண்டுவரப்பட்ட அவர் சைதாப்பேட்டை 11வது நீதிமன்ற நடுவர் பிரகாஷ் முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது திருமுருகன் காந்தியை கைதுசெய்ய முடியாது என்றும், திருமுருகன் காந்தியை காவல்துறையின் காவலில் விசாரிக்க ஒரு நாள் மட்டும் அவகாசம் தருவதாகவும் நீதிமன்றக் காவலில் ரிமாண்ட் செய்ய முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து எழும்பூரில் உள்ள பழைய காவல்துறை ஆணையர் வளாகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட திருமுருகன் காந்தி வெள்ளிக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டார்.
அவர் தன் உடமைகளுடன் பழைய ஆணையர் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்தபோது, அங்கு வந்த 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மீண்டும் அவரைக் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
2017ஆம் ஆண்டில் சிறையிலிருந்து வெளிவந்த திருமுருகன் காந்தி, தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கச் சென்றபோது அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த அந்த வழக்கில் அவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.