உலகப்பரப்பெங்கும் ஈழத்தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கும் சிறிலங்கா அரசு புரிந்த இனப்படுகொலை தொடர்பான விடயங்களை ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டு சென்று அங்கு மேற்கொள்ள இருக்கும் புதிய தீர்மானம் தொடர்பாக புலம்பெயர் அமைப்புக்கள் அந்தந்த நாடுகளின் அரசுகளோடு தொடர்புகளை மேற்கொண்டிருந்தனர்
அந்த வகையில் கனடியத் தமிழர் தேசிய அவையினர் (NCCT) ஐநா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளுடனும் கனடாவின் மத்திய அரசு மட்டத்தினருடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்
கனடிய அரசின் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் உடன் பல தடவைகள் சந்திப்புகளை மேற்கொண்ட இவர்கள் கனடாவின் பிரதான அரசியல் கட்சிகளின் கொள்கை வகுப்பாளர்கள் உடனும் கனடியத் தமிழர் தேசிய அவையினர் (NCCT) பல சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர்
இந்தச் சந்திப்புக்களில் சிறிலங்காவில் உள்ளகப் பொறிமுறை தவிர்க்கப்பட்டு பன்னாட்டு விசாரணை பொறிமுறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டது.
ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட முன்னைய தீர்மானங்களில் தமிழர் தரப்பு என்ற சொற்பதங்கள் பயன்படுத்தப்படவில்லை, ஆனால் இம்முறை வருகின்ற தீர்மானத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பு என்பது குறிக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மற்றும் சர்வதேச நீதிமன்றம் (ICJ) இவற்றில் ஸ்ரீலங்கா அரசும், குற்றமிழைத்தவர்களும் நிறுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கனடியத் தமிழர் தேசிய அவையினருக்கு (NCCT) பதிலளித்த அரச தரப்பினர் அநேக விடயங்களை ஏற்றுக்கொண்டு மற்றைய உறுப்பு நாடுகளுக்கும் கொண்டு செல்வதாக தெரிவித்திருக்கிறார்கள்