ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பிரெக்ஸிட் விவகாரத்தை கையாளுவதற்கு தான் சரியான நபர் இல்லை என்று தெரிவித்துள்ள டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரித்தானியா பல விடயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் டேவிட்டின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப் என்பவரை அந்த இடத்திற்கு நியமித்துள்ளார்.
இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்தும் போரிஸ் ஜான்சன் விலகியுள்ள நிலையில், பிரித்தானியாவின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜெரேமே ஹண்ட் புதிய வெளியுறவு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், இதற்கான ஒப்புதலில் பிரித்தானியப் பிரதமர் தெரசா மே கையெழுத்திட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.