புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இந்த தருணத்தில், அதனை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்காக அனைத்து உறுப்பினர்களும் இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்தை குழப்பாது அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென்று தலைமை உரையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரா.சம்பந்தனின் தலைமையில் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதிதலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்காலநாதன் தவிர்ந்த ஏனைய வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்பேர்தே அங்கு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்புக்கான பணிகள் குறித்தும் அதில் உள்ள விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்படும் எனவும், வழிநடத்தல் குழுவினால் கையாளப்படும் விடயங்கள், உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படும் சந்தேககங்கள், அவை தொடர்பாக முன்வைப்பதற்காக நாடாளுமன்றில் பேசவிரும்பும் விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடல்களில் ஈடுபடமுடியும் என்று கூறியுள்ளார்.
அத்துடன் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்துள்ள சந்தர்ப்பத்தை குழப்பாது அதனைச் சரியாக பயன்படுத்த வேண்டுமெனவும் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்து்ளார்.
அதனையடுத்து புதிய அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பிலான வழிநடத்தல் குழுவில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பமாகி, அது மதிய போசனம் வரையில் நீடித்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் நியமிக்கப்பட்ட தேசிய மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கு மற்றும் காவல்த்துறை சட்ட வலுவூட்டல் பற்றிய உபகுழுவின் அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர் தருமலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நியமிக்கப்பட்ட மத்திய அரசாங்கம் – மாகாண சபைகளுக்கிடையிலான தொடர்பு பற்றிய உபகுழுவின் அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தலைமையில் நியமிக்கப்பட்ட பொதுநிதி தொடர்பான உபகுழுவின் அறிக்கை, அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் நியமிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழுவின் அறிக்கை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நியமிக்கப்பட்ட நீதித்துறை தொடர்பான உபகுழுவின் அறிக்கை, அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந் தலைமையில் நியமிக்கப்பட்ட பொதுச்சேவை தொடர்பான உபகுழுவின் அறிக்கை ஆகியன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த முழுநாள் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன், புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாகவும், வெளியிடப்பட்டுள்ள உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பாகவும், வெளியிடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டு காலதமாதப்படுத்துள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாகவும் வரிவாக ஆராய்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இடைக்கால அறிக்கை விரைவாக வெளியிடப்பட்டு, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படவேண்டுமென்று கூட்டாக தீர்மானம் மேற்கொண்டுள்ளதுடன், அதற்காக அனைவரும் உரிய பணிகளை முன்னெடுப்பற்கு இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் ஏழு தசாப்தமாக நீடித்து வரும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை மேலும் காலதமாக்கிக் கொண்டு செல்லாது, உரிய நியாயமான தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும், அதற்காகவே தாம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டிற்கு முழுமையான பங்களிப்பை வழங்கிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.