வங்கக் கடலின் தென்கிழக்கில் உருவாகி வரும் புயல் வடக்கு, கிழக்கை தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த காற்றழுத்தம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்காக, 500 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு, மேற்கு திசையில் நகரும், இந்தக் காற்றழுத்தம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் புயலாக மாறும் என்றும் மட்டக்களப்புக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் கரையைக் கடக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நாளையும் நாளை மறுநாளும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு மாகாணங்களிலும், காற்று 80 தொடக்கம் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என்றும், நாளை 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாளும், 100 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலைகள் ஒரு மீற்றருக்கும் அதிகமாக எழக் கூடும் என்றும், மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.