சிறிலங்கா படைகள் மற்றும் காவல்துறையின் அடக்குமுறைகளை தாண்டி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி இன்று இரண்டாம் நாளாக இடம்பெற்று வருகிறது.
பொத்துவிலில் நேற்றுக்காலை தொடங்கிய இந்தப் பேரணி, மாலையில், மட்டக்களப்பு தாளங்குடாவில் நிறைவடைந்தது.
இன்று காலை, தாழங்குடாவில் இரண்டாவது நாள் பேரணி ஆரம்பமாகி, ஆரையம்பதி, காத்தான்குடி ஊடாக முன்னேறிச் சென்றது.
காத்தான்குடி நகரின் மத்திய பகுதியை பேரணி அடைந்த போது, பெருமளவு முஸ்லிம்களும் இணைந்து கொண்டனர்.
‘எங்கே எங்கே உறவுகள் எங்கே?, எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வட கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐநா சபையே தலையிடு, வழங்கு வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு’ என்பன போன்ற தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வலியுறுத்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து. கல்லடி ஊடாக மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்துக்கு சென்று அங்கிருந்து திருகோணமலை வீதி ஊடாக ஏறாவூருக்கு சென்றடைந்தது.
இந்தப் பேரணி திருகோணமலை வழியாக, இன்று மாலை முல்லைத்தீவு நகரைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்நாளை விட அதிகளவானோர் இன்றைய பேரணியில் பங்கேற்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.