தமிழ் மக்களின் உணர்வெழுச்சியை வெளிப்படுத்தும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
பொத்துவிலில் கடந்த 3ஆம் நாள் ஆரம்பித்த இந்தப் பேரணி ஐந்தாவது நாளான இன்று, காலை 8 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து புறப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கால்நடையாகவும், வாகனங்களிலும் கிளிநொச்சி நகர வீதிகளில் அணிவகுத்துச் சென்றனர்.
இந்தப் பேரணி பரந்தன், ஆனையிறவு, இயக்கச்சி, பளை, ஆகிய இடங்களைக் கடந்து நண்பகலளவில், முகமாலையைக் கடந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் நுழைந்தது.
அங்கிருந்து ,மிருசுவில் கொடிகாமம், சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை, வழியாக யாழ்ப்பாண நகரத்தை பேரணி அடைந்துள்ளது.
தென்மராட்சி மண்ணில் பேரணி தீப்பந்தங்களை ஏந்தியவாறு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ். நகரில், பொதுநூலகம், உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம் ஆகிய இடங்களைக் கடந்து, யாழ் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற பேரணி, நல்லூர் தியாகதீபம் நினைவிடத்தை அடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அங்கிருந்து பருத்தித்துறை வீதி வழியாக, கல்வியங்காடு, கோப்பாய், நீர்வேலி, வல்லைவெளி ஊடாக வடமராட்சிப் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளது.
புறாபொறுக்கி சந்தி, நெல்லியடி, வதிரிச்சந்தி, உடுப்பிட்டி, வல்வை தீருவில் வெளி ,வல்வெட்டித்துறை நகரம் ,நெடியகாடு ஊடாக, ,பொலிகண்டியை அடையும் இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியின் முடிவில், எழுச்சிப் பிரகடனம் ஒன்றை வெளியிடவும், ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.