பொத்துவில் முதல் கொலிகண்டி வரையான பேரெழுச்சியின் வெற்றியானது தனிப்பட்டவர்களின் வெற்றியல்ல எனவும், எல்லோரும் இணைந்த இனத்தின் வெற்றி என்றும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் பல்லாயிரக்கணக்கில் திரண்ட மக்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பேரணியில் முக்கியமான விடயம் வெளியிலிருந்து உத்தரவுகள் வழங்கப்பட்டன. வேலன் சுவாமிகளை முன்னால் நிறுத்திவிட்டு பின்னாலிருந்து உத்தரவுகள் வழங்கப்பட்டன. வேலன் சுவாமியில் பிழை இல்லை.
இதில், அரசியல்வாதிகள் வேண்டாம் என்பது போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மூன்றாம் திகதி பொத்துவிலில் பேரணி ஆரம்பமானபோது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு செல்லாமல் விட்டிருந்தால் அந்தப் பேரணி பொத்துவிலோடு முடிந்திருக்கும்.
அங்கு போன நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறை சொல்வது சரியல்ல. அதிலே, மிக முக்கியமாக முன்னணியில் சுமந்திரனும் சாணக்கியனும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.