போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கத் தனியான நீதிமன்றம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போதைப்பொருட்களை கட்டுப்படுத்துதல் மற்றும் குற்றங்களை குறைத்தல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நீண்டகாலம் எடுக்கின்றது.
இதனால் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பாக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் தடைப்படும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. மேலும், போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது தொடர்பாக நாட்டின் அனைத்து மக்களும் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றார்கள்.
இவற்றினைக் கருத்திற்கொண்டே போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்க தனியான நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலைகள், அரச திணைக்களங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பானையை ஒழிப்பது தொடர்பாக சட்டத்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.